Thursday 30 May 2013

புத்துயிர்ப்பு (Resurrection)


புத்தகங்கள் மனிதனுக்கு கிடைத்த வரபிரசாதம் என்றால் மிகையில்லை. புத்தகங்களின் மீது அதிக பற்று வைத்திருத்தவர்கள் எனக்கு நண்பர்களாக கிடைக்கப்பெற்றதால் தான், உலக புகழ் பெற்ற  ரஷ்ய மொழிபெயர்ப்பு புத்தகங்களின் அறிமுகம் எனக்கு கிடைத்தது. ரஷ்ய நாவல்கள் அதிகம் படித்ததால் என்னவோ எனக்கு மற்ற புத்தகங்களின் மீதான ஆர்வம் வெகுவாக குறைந்தது. எனக்கு அதிகம் பிடித்த ரஷ்ய நாவல்கள் போர் இல்லாத இருபது நாட்கள்,  அதிகாலை அமைதியிலே, விடி வெள்ளி, செம்மணி வளையல்கள், அலெக்சாந்தர் புஷ்கினின் ஸ்பேடுகளின் ராணி, வெண்ணிற இரவுகள், மூன்று காதல் கதைகள் மற்றும் லேவ் தல்ஸ்தோய்யின் புத்துயிர்ப்பு. இதில் அதிகாலை அமைதியிலே என்ற நாவலையை உல்டா செய்து எடுக்கப்பட்ட படம் தான் பேராண்மை. இந்த படம் வந்த போது என் நண்பன் இந்த படத்தை கண்டபடி திட்டிக்கொண்டிருந்தான். அவனுக்கு அந்த நாவல் ரொம்ப பிடித்திருந்ததால் இந்த படத்தை இவ்வாறு உல்டா செய்து எடுத்தது அவனுக்கு பிடிக்கவில்லை. நாங்கள் நிறைய நேரங்களை  இந்த புத்தகங்களை பற்றி பேசியே கழித்திருக்கிறோம். இந்த புத்தகங்கள் ஒரு புதிய உலகத்திற்குள் செல்லும் வாய்ப்பை எனக்கு எற்படுத்தி தந்தன . 



மொழிபெயர்ப்பு நாவல்கள் படிக்க தொடங்கியவுடன் எனக்கு கிடைத்த இரண்டாவது புத்தகம் புத்துயிர்ப்பு நாவல். இந்த புத்தகத்தை எனக்கு தரும் போது இப்புத்தகத்தை பற்றிய சிறப்பை நண்பன் கூறவில்லை. நல்ல புத்தகம்  என்ற ஒற்றை வார்த்தையில் சொன்னான். பொதுவாக நண்பர்களிடம் வாங்கும் புத்தகத்தை நான் 99.99% திருப்பி தந்துவிடுவோன். அந்த மீதி உள்ள 0.01% அவர்களே எனக்கு அன்பளிப்பாக தரும் புத்தகத்தை குறிக்கும்.(பின்னர் புத்துயிர்ப்பு நாவலை எனக்கு அன்பளிப்பாக தந்த நண்பனுக்கு நன்றி). புத்துயிர்ப்பு நாவலை நான் படிக்கும் போது எந்த எதிர்பார்ப்பும் இன்றி படிக்க ஆரம்பித்தேன்.  ஆனால் ஒவ்வொரு பக்கமும் எனக்கு ஒருவித பிரமிப்பை எற்படுத்தியது.லேவ் தல்ஸ்தோய் அவர்கள் எதற்காக இந்த நாவலை எழுதினார் என்பதை பின்னர் அறிந்த போது பிரமிப்பு இரண்டு மடங்காக ஆனது. புத்தகத்தை எழுத அவர் எடுத்துகொண்ட பத்தாண்டுகளில் அவருக்கு எற்பட்ட  கழ்டங்களை இந்த புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் நாம் உணர முடியும். புத்தகத்தின் முதல் பாகத்தில் 37 மற்றும் 39 & 40வது அத்தியாயங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.  புத்தகத்தை ஒரே இரவில் என்னால் படிக்க முடியவில்லை என்றாலும் அந்த இரவுகளில் படிக்கும் போது எற்பட்ட அந்த பிரமிப்பு அதனால் எற்பட்ட அனுபவத்தையும் இப்போது நினைக்கும் போதும் ஒருவித மகிழ்ச்சி என்னுள் எழுகிறது.

இன்நாவலை மொழிபெயர்த்த ரா. கிருஷ்னையா அவர்களையும் இங்கு நினைவு கூற வேண்டும். இவரை விட வேறு யாரும்  இவ்வளவு திறம்பட மொழிபெயர்த்திருப்பார்களா என்பது சந்தேகமே. நாவலை படிக்கும் போது அதில் வரும் நெஷ்லுதவையும், மாஸ்லவாவையும் உயிருடன் நம் கண்முன் நிழலாட செய்திருப்பார். ஒரு முறை அல்ல, பலமுறை   அனைவரும் படிக்க வேண்டிய ஒரு அற்புத படைப்பு இந்த புத்துயிர்ப்பு நாவல். அப்படி நீங்கள் இதுவரை படிக்கவில்லையென்றால் உடனே தேடிபிடித்து  படியுங்கள்.


கடல் காற்று வீசும்.......


2 comments:

  1. படிக்க விழைகிறேன் நண்பா. நன்றி.

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி நண்பா

    ReplyDelete