Wednesday 24 July 2013

குட்டி தேவதை - கவிதை


அழகிற்கே அழகு சேர்க்கும் இரண்டு
வயது குட்டி தேவதை என் தங்கை...

சின்னச்சிறு கைகளால் என்னை 
அடிக்கும் போதும்
என் புத்தகங்களை கலைக்கும் போதும்
எனக்கு கோபமே எற்பட்டதில்லை...

அப்பாவின் அயர்ன் செய்த சட்டையை 
கலைக்கும் போதும்
அவர் கைபேசியில் விளையாடும் போதும்
அப்பாவின் கோபம் அம்மாவிடம்...

பூஜையறையில் கட்டுப்பாடு 
எனக்கு மட்டுமே...!

மழலை குரலில் அவள் பாடும் கானம்
வீடெங்கும் எதிரொலிக்கும்...

அவளின் ஒவ்வொரு அசைவையும் 
பார்த்து பார்த்து
மகிழ்ந்தோம் நித்தம் நித்தம்...

ஒவ்வொரு முறையும் பள்ளிவிட்டு 
வரும் போது
மகிழ்ச்சி பொங்க ஒடிவந்து
கட்டி அணைப்பாள்...

ஒடிபிடித்து, மறைந்து நின்று, பூச்சாண்டி காட்டி
விளையாடியது அனைத்தும் 
நின்றது ஒரு நாள்...

காய்ச்சலில் அவள் விழும் போது
லேசான காய்ச்சல் என நினைத்தோம்...

ஆனால் காய்ச்சல் நிற்காததால்
செய்வதறியாமல் தவித்தோம்...

உற்றார் உறவினர், நண்பர்களின் பரிந்துரையில்
டாக்டர்கள் மாறினார்கள் ஆனால்
காய்ச்சல் மறையவில்லை...

ஊசிகளும், மாத்திரை, மருந்துகளும்
அவளை நிலைகுலைய செய்து
நிறம் மாற செய்தன...

முருகன், சிவன், ஐயப்பன் என
அனைத்து கோயிலுக்கும் சென்று வேண்டி
தீறுநீரு பூசுகிறால் அம்மா...

பீட்டர் அண்ணாவுடன் சர்ச்சில்
பிரார்த்தனையும்...
பானு அக்காவுடன் தர்காவில் தாயித்தும்...
கட்டி வேண்டிக்கொண்டார்கள்...
அவளை மீட்டெடுக்க...

அனைத்து கடவுளிடமும் உள்ளம்
உருகி வேண்டிக்கொண்டும்
காய்ச்சலின் வீரியம் மட்டும்
குறையவில்லை...

இரவில் அவளின் வலியின் முனங்கல்கள்
என் உயிரை உறைய செய்தது...

காது பொத்தி தலையணையில் முகம் 
புதைத்தேன் கேட்க முடியாமல்...

ஒருநாள்...
பள்ளியிலிருந்து என்னை 
அழைக்க வந்தார் பீட்டர் அண்ணா...
வீட்டிற்கு வருமுன்னே சோகம் 
என்னை கவ்வியது...

உள்நுழைந்து அன்னையிடம் 
செல்லும் போது...

முகம் மட்டும் தெரிய துணியால்
சுற்றப்பட்டு விட்டின் நடுவில்
கிடத்தப்பட்டு இருக்கின்றாள் என் தங்கை...

புத்தகப்பையை கழட்டும் முன்பே 
கட்டியணைத்து  கதறினால் அன்னை...

என்னையறியாமல் அழுகை பீரிட்டது...

மாலையில் அன்னையின் கதறலோடு
எடுத்து செல்லப்பட்டாள்...
புதைப்பதற்காக...

இரவில் தலைசாய்ந்து யார் மடியிலோ
தூங்கிப்போனேன்...

கனவுகள் என் தூக்கத்தை கலைக்க
கண்மூடி கிடந்தேன்...

பின்னிறவில் நான் மட்டும்
பூஜையறையிலிருந்த அனைத்து படங்களையும்
குப்பைதொட்டியில் வீசினேன்...

தங்கச்சி பாப்பாவின் புகைப்படமும்
பொம்மைகளையும் வைப்பதற்கு...
                   

                           ***********




கடல் காற்று வீசும்......

No comments:

Post a Comment